நேபாளத்தில் வன்முறை உச்சம் : பதவி விலகினார் உள்துறை அமைச்சர்
நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் பதவியிலிருந்து விலகுவதாக இன்று(செப். 8) அறிவித்தார். தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலியிடம் வழங்கினார்.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். 42 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதள செயலிகளுக்கு அரசு தடை
நேபாளத்தில் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்கு செப். 4 ஆம் திகதி அந்நாட்டு அரசு தடை விதித்தது. சமூக ஊடக தளங்கள் ஒழுங்கு நடவடிக்கையின் ஒருபகுதியாக விதிமுறைகளுக்குட்படாத சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடில் உள்ள இளம் தலைமுறையினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என பலர் தலைநகரில் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
தலைநகரான காத்மண்டுவில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடைக்கு எதிராக போராட்டம்
நாட்டில் 'ஊழலை ஒழிக்க வேண்டும், சமூக வலைதளங்களை அல்ல', 'ஊழலுக்கு எதிராக இளம்தலைமுறை' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகரில் குவிந்த போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர். காவல் துறையினரின் தடுப்பையும் மீறி சிலர் நுழைந்ததால், காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் இதுவரை 19 பேர் உயிரிழந்தனர். 42 பேர் படுகாயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
