யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதி : தமிழரசுக்கட்சி வழங்கிய வாய்ப்பு
புதிய இணைப்பு
யாழ் மாநகர சபைக்கான (Jaffna Municipal Council) முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசுக்கட்சி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி இன்று (31) வெளியிடப்பட்டது. குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளியான வர்ததமானி
இது குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன், யாழ் மாநகர சபையில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார். மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற பாத்திமா றிஸ்லாவை இலங்கை தமிழரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தை உறுதி செய்த கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத்தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோருக்கும் யாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக நாம் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் தமிழ் மக்களுடனான நல்லிணக்கச் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் வலுவாக அமைந்திருக்கின்றன என்பதற்கு மேற்படி நியமனம் முன்னுதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் சாட்சியமாகவும் அமைந்திருக்கின்றது.
யாழ்ப்பாணம் 13ம் வட்டாரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட அப்துல்லாஹ், ஒப்பந்த அடிப்படையில் அவரோடு இணைந்து போட்டியிட்ட முஹம்மது இர்பான் மற்றும் பாத்திமா றிஸ்லா ஆகியோர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், சமூக நல்லிணக்கம் சார்ந்த விவகாரங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து முற்போக்காகச் செயற்படுவார்கள் என யாழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 21 மாவட்டங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
அதன்படி, இந்த வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) வெளியிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை இங்கே பார்வையிடலாம்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அந்தந்த நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்க வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
