ஈரானியப் போர்க்கப்பலில் உயிரிழந்தோர்: வெளியான சட்ட மருத்துவக் குழுவின் அறிக்கை
ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான IRIS Dena போர்க்கப்பலில் இருந்த மாலுமிகள், பலத்த காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பலத்த காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பேராசிரியர், “உயிரிழந்தவர்களின் உடல்கள் காலியில் உள்ள கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் காலவரையறையின்றி வைக்கப்பட வேண்டியிருக்கும்.
வைத்தியசாலையின் பிரேத அறை 40 உடல்களை மட்டுமே வைக்கும் வசதி கொண்ட நிலையில், இதனால் ஏனைய உடல்களைப் பாதுகாப்பதற்காக மற்றுமொரு கட்டிடத்தில் ஐஸ் (Ice) இட்டுப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடல்களைப் பாதுகாக்க இரண்டு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் (Deep freezer containers) பெறப்பட்டுள்ளன.
எனினும், அவற்றில் வெப்பநிலையை மைனஸ் 20 முதல் 30 டிகிரி செல்சியஸில் பராமரிப்பது சவாலாக உள்ளது.
மின்சாரக் கட்டணம்
இந்தநிலையில், 84 உடல்களைப் பாதுகாப்பது எமது பொறுப்பு என்பதால், அதிக மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தாலும் உரிய மரியாதையுடன் உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்களில் 20 பேர் சிகிச்சையின் பின்னர் விடுவிக்கப்பட்டு வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பத்து பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காலி பிரதான நீதிவான் சமீர தொடங்கொட மற்றும் மேலதிக நீதிவான் மஹேஷிகா விஜேதுங்க ஆகியோர் மரண விசாரணை நடத்தியுள்ளனர்.
அத்தோடு, பேராசிரியர் யு.சி.பி.பெரேரா, வைத்தியர் அஜித் ரணவீர, வைத்தியர் ஜானகி வருஷாஹண்டி மற்றும் வைத்தியர் ரோஹன ருவன்புர ஆகியோரைக் கொண்ட குழுவினர் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |