நசீர் அஹமட்டின் ஆசனத்திற்கு புதிய வேட்பாளர் நியமனம்: வெளிவரவுள்ள வர்த்தமானி
முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர நேற்று (9) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இதனால் வெற்றிடத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பட்டியலில் அடுத்த வேட்பாளர் தேர்தல் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நசீர் அஹமட்டுக்குப் பிறகு இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான ஆவார். அத்தோடு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சரியானது என கடந்த 6ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
