கோட்டாபய விடுத்துள்ள பணிப்புரை! ஆரம்பிக்கப்பட்ட அடுத்தக்கட்ட நகர்வுகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய செயற்திட்டங்களையும் அணுகுமுறைகளையும் கண்டறிய வேண்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று அரச தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
மறைமுகமாகவும் நேரடியாகவும் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் சுற்றுலாத் துறை
பெருமளவிலான வேலை வாய்ப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் என்பன அதிகமாக பாதிக்கப்படுவதால் அதை விரைவாக சரி செய்து அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீட்சியடைந்தாலும் நெருக்கடியில் தள்ளாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் கொண்டிருக்கும் நாட்டைப் பற்றிய தவறான தகவல்களை திருத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் மக்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார்.