போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு
லெபனான் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, போர் நிறுத்தம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், லெபனானில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முழு பலத்துடன் தாக்குதல்
பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வரை ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், அந்த அமைப்பை முழு பலத்துடன் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Image Credit: Middle East Monitor
ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக நிராயுதபாணியாக்குவதும், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நிலையான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதுமே இஸ்ரேலின் இறுதி இலக்கு என நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்பின் கூற்று மறுப்பு
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதால் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் குறைத்துக் கொள்ளும் என்று நெதன்யாகு தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களிடம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

Image Credit: PBS
இந்த நிலையில், அதற்கு மாறாகத் தாக்குதல்கள் தொடரும் என நெதன்யாகு தற்போது அறிவித்திருப்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |