சர்வதேச விசாரணைகளை எதிர்க்கும் அரசு : காரணத்தை அம்பலப்படுத்திய பிரதமர்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற வாய்மொழிமூல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை.
சர்வதேச விசாரணை
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டு மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைத் தேசிய நெறிமுறைகளினூடாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும், அந்த செயன்முறையானது உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும். இந்த விடயங்களின் அடிப்படையிலேயே சர்வதேச விசாரணைகளை அரசாங்கம் எதிர்க்கின்றது.
அந்தவகையில் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையினூடாக, பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |