எவரும் போர்க்கொடி தூக்க முடியாது..!
ஆர்ப்பாட்டக்காரர்களுக்குள் சில காடையர்களும் மறைந்திருந்து செயற்படுகின்றார்கள் எனவும் அவர்களைக் கலைக்கும் முழுச் சுதந்திரம் காவல்துறையினருக்கு உண்டு என்றும் அதற்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியாது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் பங்குபெறும் காடையர்களும் அவர்களுக்கு உதவி புரிபவர்களுமே அரசாங்கம் மற்றும் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களின்போது காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டு பயன்படுத்தப்பட்டதாகவும், இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், மலக்கழிவு நீரைப் பயன்படுத்தியே போராட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே ரணில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை உத்தரவுகளை மீறிச் செயற்படும்போதும், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடும் போதும் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்கும் முழுச் சுதந்திரம் காவல்துறையினருக்கு உண்டு. அதற்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண் ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் சில தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

