கோதுமை மாவின் விலை அதிகரிப்பு - அமைச்சர் வெளியிட்ட தகவல்
கோதுமை மா விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே கோதுமை மாவை அதே விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என தெரிவித்த அமைச்சர், அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜா எலவிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மா உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சு
கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு மா உற்பத்தி நிறுவனங்களுடன் தாம் நடத்திய கலந்துரையாடலின் போது, ஒரு மாதத்திற்கு மாவு உற்பத்தி செய்ய போதுமான கோதுமை தங்களிடம் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்த அமைச்சர், துருக்கி மற்றும் டுபாயில் இருந்து ஓடர் செய்யப்பட்ட கோதுமை இம்மாதம் 15ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வரவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
எனவே எதிர்காலத்தில் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இறக்குமதி செய்யப்பட்ட மாவு உற்பத்தி செலவில் அதிகரிப்பு ஏற்படாததால் விலையை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் கலந்துரையாடல்
பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்துடன் நாளை (5) கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பாண் விலை தொடர்பில் தற்போதைக்கு தீர்மானம் எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மாவின் விலை தற்போது 400 ரூபாவாக உயர்ந்ததை அடுத்து பாணின் விலையும் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

