கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி!
2022 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
24 வருடங்களாக ஸ்தம்பிதமடைந்திருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் உள்ளிட்ட தற்போதைய உலகளாவிய சூழலினால் ஏற்படும் சவால்களை ஒரு வெளிப்புற நெருக்கடி என ஒப்புக்கொண்டார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
எவ்வாறாயினும், இத்தகைய வெளிப்புற அழுத்தங்களை திறம்பட கையாள்வதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், வலுவான மற்றும் நெகிழ்ச்சிமிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய நிர்வாகத்தின் பரந்த குறிக்கோள் என்றும் ஜனாதிபதி கூறியள்ளார்.
மேலும், ஊழல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தையும், அனைத்து குடிமக்களுக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் சலுகைகள்
அரசியல்வாதிகள் அனுபவித்து வரும் அளவுக்கு அதிகமான சலுகைகளைக் கட்டுப்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்கள் ஆணையின் முக்கிய எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர, இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை சமமாக நிலைநாட்டுவது தனது நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதனை சாதிக்க முடியாவிட்டால், எதிர்கால எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அது சாத்தியமாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |