புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை
வடமாகணத்தில் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமல் மூடப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட காரணங்களால் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வது மாணவர்களின் வீழ்ச்சிக்கு காரணம் எனவும் வடமாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கல்வி என்பது ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியையும் ஆளுமையையும் பல் திறன்களையும் சுட்டிக்காட்டுகின்ற ஒரு விடயம். புலம்பெயர்ந்த சமூகம் பல்கலை நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகள்,பாடசாலை புனர்நிர்மாணங்கள்,கிராம, ஆலய புனர்நிர்மாணங்கள் போன்ற விடயங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றது.
கனகராயன் குளம் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கிற ஆதரவு
கனகராயன் குளம் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்திருக்கிற இந்த ஆதரவு என்பது மிக அளப்பரியதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் மாணவர்களை வளப்படுத்துவதாகவும் இருக்கின்றது.
மாணவர்கள் இந்த வளங்களை சரியாகப் பயன்படுத்தி கல்வி, விளையாட்டுத்துறை ,கலைத்துறை மற்றும் பல்வேறு திறன்களை இதன் மூலம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு.
வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகள்
வடக்கிலே 194 பாடசாலைகள் மாணவர்கள் போதாமையினால் மூடப்பட்டுள்ளன. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் நகரங்களை நோக்கி நகருவதாகவும் பிறப்பு வீதம் குறைவடைந்து செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவாகரத்து பெறுவோரின்தொகை அதிகரித்துக்காணப்படுவதாகவும் குழந்தைப்பேறு கிடைப்பதன் தொகை குறைவடைந்து காணப்படுவதாவும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை நிவர்த்தி செய்ய புலம்பெயர் சமூகமும் உள்ளூர் சமூகமும் இணைந்து செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
