சிஐடியினுள் நிலைப்பெறும் கெஹல்பத்தர பத்மே! நீதிமன்றின் உத்தரவு
கெஹல்பத்தர பத்மே டிசம்பர் 2 ஆம் திகதி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலுக்கு வெளியே மாற்றப்படமாட்டார் என முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.
தனது மகனின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விசாரணையின் போது அவரை எந்த வெளிப்புற இடத்திற்கும் அழைத்துச் செல்வதைத் தடுக்கவும் நீதிமன்ற உத்தரவைக் கோரி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவின் விசாரணையின் போது இந்த நீடிப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது.
பத்மேவின் பாதுகாப்பு
அதன்போது, பிரதிவாதிகள் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா முன்னிலையாகியுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட உத்தரவாதத்தை நீட்டிக்கவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
மனுதாரர் சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, தற்போது CID யால் விசாரிக்கப்படும் பத்மே, அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, திணைக்களத்தின் வளாகத்திற்குள் இருக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த விசாரணை திகதி வரை நீதிமன்றம் உத்தரவாதத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
அடுத்த மனு விசாரணை
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஏற்கனவே உள்ள உத்தரவாதத்தை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீட்டித்து உத்தரவிட்டதுடன், குறித்த திகதியில் மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்மேவின் தாயார், தனது மகன் தற்போது சிஐடி காவலில் இருப்பதாகவும், விசாரிக்கப்படுவதாகவும், திணைக்களத்திற்கு வெளியே வேறு எந்த இடத்திற்கும் அவர் மாற்றப்பட்டால் அவரது பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் முன்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அத்தகைய இடமாற்றங்களைத் தடுக்க முறையான உத்தரவை அவரது சட்டக் குழு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 5 மணி நேரம் முன்
