பிள்ளையானுடன் இணைய துடிக்கும் NPP : சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்
களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி பிள்ளையானுடன் (Pillaiyan) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய வெளிவிவகாரத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் (Arun Hemachandra) முறைகேடுகள் தொடர்பில் உரையாற்றிய போதே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதாவது, நாமல் ராஜபக்சவுடன் நீலப் படையணியுடன் இணைந்து செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கும் துணை போனவர் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொள்கையுடன் செயற்படுகிறோம்
இதற்கு பதிலளித்த சாணக்கியன், ”நான் சபையில் உரையாற்றியபோது எந்தவொரு முறைகேடுகள் தொடர்பிலும் எதனையும் குறிப்பிடவில்லை.
கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் தொடர்பிலேயே கருத்துக்களை முன்வைத்தேன். முதலில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தான்தோன்றித்தனத்தால் தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளீர்கள். நாங்கள் கொள்கையுடன் செயற்படுகிறோம்.
களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு உங்களின் கட்சி பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் உங்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
