பத்மே மற்றும் சாலிந்த கைது குறித்து காவல்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை
மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்களின் பட்டியலில், குற்றவியல் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரும் மலேசியாவில் காவலில் இருப்பதாக எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்புத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மலேசியாவுக்குச் சென்ற காவல்துறை
மலேசியாவுக்குச் சென்ற பல காவல்துறை அதிகாரிகள் குழுக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகளில் குறித்த இரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் குறித்து இலங்கை காவல்துறைக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளதாக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மலேசியாவிலிருந்து நாடு கடத்துவதா அல்லது மேலதிக விசாரணைகளை நடத்துவதா என்பது குறித்து மலேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் முடிவு செய்யும் என்றும் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை
கடந்த ஜூலை 11 ஆம் திகதி, மலேசியாவில் மேற்குறிப்பிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறையின் உதவியை அவர்கள் நாடுவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் தேசிய மத்திய பணியகத்திற்கு தகவல் கிடைத்ததாக உதவி காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, இந்த இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களும் கைரேகைகளும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் குற்றவியல் ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

