வவுனியாவில் காணி அபகரிப்பு: விகாரை பெயரில் காவல்துறை ஆக்கிரமிப்பு
வவுனியா (Vavuniya), ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை காவல்துறையினர் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏ9 வீதியில் ஓமந்தை காவல் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நேற்றையதினம் (30) ஓமந்தை காவல்துறையினர் சுத்தப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது அங்கு விகாரை ஒன்றினை அமைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருவதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காணி ஆவணங்கள்
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.
எனினும், குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே காவல்துறையினர் காணியை சுத்தம் செய்துள்ளனர்.
காணியில் விகாரை
இந்நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி சுத்தம் செய்ததாகவும், குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு காவல்துறையினர் முற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
