அதிபர், ஆசிரியர்களுக்கு அரசாங்கம் கண்டிப்பான உத்தரவு
இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் அழுத்தம் கொடுத்தால் அதிபர், ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இந்த எச்சரிக்கையை விடுத்த சரத் வீரசேகர, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “21 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 200 மாணவர்களுக்கும் குறைவானவர்களைக் கொண்ட மாணவர்களே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.
ஆசிரியர்கள் மீது நான் அதீத கௌரவத்தை வைத்திருக்கின்றேன். அவர்களது சம்பள உயர்வு கோரிக்கை நிச்சயமாக ஏற்கின்றோம்.
யுத்தத்தை ஆயுததாரிகளின் போராட்டத்தை நாம் நியாயப்படுத்த மாட்டோம். ஏனென்றால் போராட்டத்தில் பொதுமக்களும் உயிரழப்பார்கள்.
அதேபோல்தான் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே 21ஆம் திகதி ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
பாடசாலைக்குத் திரும்ப வேண்டாம் என ஆசிரியர்களுக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளோ வேறு தரப்பினரோ அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்” என்றார்.