உச்ச நீதிமன்றை நாடவுள்ள எதிர்க்கட்சிகள் - அரசுக்கு காலக்கெடு விதித்துள்ள பீரிஸ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் நிதி மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காவிட்டால் அவருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணத்தைச் செலுத்தாவிடின், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்திடம் கோரவுள்ளதாகவும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை குறித்து அடுத்த வாரம் முதல் சர்வதேச சமூகத்திற்கும் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனத் தெரிவித்த எம்.பி., அடுத்த வாரம் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவிற்கு அரசாங்கம் அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.