வெளிநாடொன்றின் நாடாளுமன்றில் களேபரம்: எதிர்க்கட்சியினரின் குண்டுவீச்சில் எம்.பிக்கள் படுகாயம்
செர்பியா (serbia) நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்.பிக்கள் காயமடைந்ததுடன் அதில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 04) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியை (SNS) எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
எதிர்க்கட்சியினர் அமளி
ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் பதவி விலகலை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
U Skupštini je došlo do guranja u prostoru ispred predsednice, a tu je i dim.#Skupština pic.twitter.com/JnN28K8FUC
— Otvoreni Parlament (@O_Parlament) March 4, 2025
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் ஆளும் கட்சி எம்.பிக்கு பக்கவாதம்
இதில் சுமார் 3 எம்.பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியிலிருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகலை நாடாளுமன்றில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதனால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
