பதவியேற்றவுடன் திட்டங்களை அறிவித்தார் வடக்கு ஆளுநர்
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்றுத் தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
தனது அலுவலகத்தில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“என்னை வாழ்த்துவதற்கு வருகை தந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பேன்.
இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
அந்த வகையில் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிப்பேன்.
அதேபோல, வட மாகாண அவைத்தலைவர் யாழ் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.
ஏற்கனவே பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும் அதை முன்னெடுத்துச் செல்லுமாறும் கூறியிருக்கின்றார். அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.
யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக உணர்ந்திருக்கின்றேன்.
எனவே அந்தப் பிரச்சினையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பேன்” - என்றார்.
