முறிந்தது போர்நிறுத்தம் - பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலை நடத்துமாறு தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தனது அமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தம்முடன் இம்ரான்கான் அரசு கடந்த ஒக்டோபர் 25ம் திகதி ஆறு அம்ச ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் அதனை அரசாங்கம் மீறிவிட்டதாக தெரிவித்தே அவர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் நவம்பர் 30ம் திகதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான் படையினரை விடுதலை செய்வது உள்பட 6 அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றன. இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாக தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஓடியோ செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் தலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மேலும், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.