ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம்
துறைமுக விவகார அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவிற்கும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலாளர்கள் நிறுவகம் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதம் இன்றைய (05-02-2026) நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் நிலையில் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
இதன்போது தயாசிறியின் கருத்து தொடர்பில் விளக்கம் வழங்கிய பிமல் ரத்நாயக்க, “நாடாளுமன்றத்தைப் பிழையாக வழிநடத்தவே இவர்களுக்குத் தெரியும்.
இவர்கள் பாவப்பட்டவர்கள், சரியான கட்சி இல்லாது காணப்படுகின்றனர்.

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களைச் சந்தித்தீர்கள், என்ன நடந்தது? உங்கள் சதி தோற்கடிக்கப்பட்டது.
ஐயோ தயாசிறி அமருங்கள், அவர்கள் கூறுவதைக் கண்டுகொள்ள வேண்டாம் சபாநாயகரே.
எதிர்க்கட்சித் தலைவருக்கு இவருடன் இருக்க விருப்பம் இல்லை, இவரை கட்சிக்குள் கணக்கெடுப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது எழுந்து கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரை நோக்கிக் கிண்டலாக “இதையும் இரத்தத்தில் எழுதித் தருவீர்களா?” எனப் பிமல் ரத்நாயக்க பதில் வழங்கினார்.
மொட்டுக் கலாசாரம்
மேலும் உரையைத் தொடர்ந்த பிமல், “எதிர்க்கட்சித் தலைவரே இவர்களுடன் சென்றால் உங்களுக்கும் இழப்பு ஏற்படும்.
இவர்கள் மக்களால் ஏசி வீட்டுக்கு அனுப்பிய மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

எதிர்க்கட்சித் தலைவரே மொட்டுக் கலாசாரத்திற்கு இரையாக வேண்டாம், இவருடன் பயணிப்பதால் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியாகி ரணிலைத் தோற்கடித்த நீங்கள், மொட்டுக் கட்சியைச் சேர்த்து உங்கள் மதிப்பைத் தரம் தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
இங்கு கூச்சலிடும் ஒருவர் மொட்டுக்கட்சியைச் சேர்ந்தவர், மற்றையவர் தனது உறுப்புரிமையைக் காசுக்கு விற்றவர்.
உங்கள் பதவியை இவர்களுடன் சேர்ந்து அவமதித்துக்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |