வரவு செலவுத்திட்ட காலத்தில் நாடாளுமன்றத்தின் செலவு தொடர்பில் வெளிவந்த தகவல்!
நாடாளுமன்றத்தின் தகவல்களின் படி வரவு செலவுத்திட்டம் தொடர்பான கூட்டங்கள் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 80 கோடி ரூபாய் செலவாகியதாக தெரிவிக்கின்றது.
கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.
இதற்கு அடுத்த நாள் அதாவது 13 ஆம் திகதியில் இருந்து வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்கள் ஆரம்பமாகியதுடன் அவை கடந்த 10 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்புடன் நிறைவடைந்தன.
இதனடிப்படையில் 23 நாட்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதம் நடந்துள்ளது.
வழமையாக நாடாளுமன்றத்தினை நடத்த நாள் ஒன்றுக்கு இரண்டு கோடியே 57லட்சம் ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் நடைபெறும் போது, நீண்ட நேரம் நாடாளுமன்றம் இயங்கும்.
இதனால், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையை விட அதிகளவான பணம் செலவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், உணவு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள், கடிதம் உட்பட காகிதாதிகளை வழங்குதல் போன்றவற்றுக்காக இந்த பணம் செலவாகிறது.
வரவு செலவுத்திட்டம் நடைபெறும் நாட்களில் நாடாளுமன்ற அவை மற்றும் ஏனைய இடங்களில் குளிரூட்டிகள் தொடர்ந்தும் இயங்கும் என்பதால், மின்சாரத்திற்காக அதிகளவில் செலவாகின்றது.
இதனிடையே சாதாரண நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மீனுடன் கூடிய உணவுக்காக 951 ரூபாய் செலவிடப்படுவதுடன் காய்கறியுடன் கூடிய உணவுக்கு 629 ரூபாய் செலவிடப்படுகிறது என நாடாளுமன்ற கணக்காய்வுப் பிரிவு கூறியுள்ளது.