அரசாங்கத்தின் மீதான அதிருப்தி: நாடாளுமன்றத்தை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு (நேரலை)
இரண்டாம் இணைப்பு
இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
இந்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைக் காட்டுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சஜித் பிரேமதாச கட்சியின் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி ஆரம்பமானதுடன் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
24ஆம் திகதி தவிர அனைத்து நாட்களிலும் வாய்மொழி விடைக்கான கேள்விகளுக்கு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவாதத்திற்கு வரும் சட்ட மூலங்கள்
இன்று காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை குற்றவியல் நடைமுறைச் திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் நடைமுறைச் சட்ட திருத்தச் சட்டமூலம் ஆகியவை விவாதம் இன்றி நிறைவேற்றப்படவுள்ளன.
அதன்பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தொழில் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 4.30 மணி முதல் 4.50 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு நேரத்தின் பிரேரணை இன்று மாலை 4.50 முதல் 5.30 வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் மீதான விவாதம் நாளை முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
மார்ச் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் முதலாவது அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மைய மோதல்களின்போது படுகொலை செய்யப்பட்ட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் இரண்டாவது நாள் அனுதாப விவாதத்திற்கு எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரத்தை ஒதுக்குவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
