உள்ளூராட்சி மன்ற தலைவர் தெரிவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகளின் படி உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மையை பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு வழங்கப்படும் என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R. M. A. L. Rathnayake) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று (07) வெளியான நிலையில், பல உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி (Npp)ஆட்சியைப் பிடித்துள்ளது.
வெளியாகவுள்ள வர்த்தமானி
அத்துடன், சில உள்ளூராட்சி நிறுவனங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சில சுயேட்சைக் குழுக்களும் வெற்றி பெற்றுள்ளன.
எனினும், பல உள்ளூராட்சி மன்றங்களில் அந்தக் கட்சிகளால் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியவில்லை.
இதேவேளை, வட்டாரம் மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள்
உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து, எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வட்டாரம் மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் நியமிக்கப்பட வேண்டிய பெண் பிரதிநிதிகள் குறித்து அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
