பதவி மோகத்தால் மக்களை கூறுபோடுகின்றனர் - தவராசா கலையரசன் குற்றச்சாட்டு
ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களை கூறுபோடுகின்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் (Thavarasa Kalaiyarasan )தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் அதற்கொதிரான பிரசாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு, அதனை முழுமையாக இல்லாமல் செய்துவிட்டு, எமது தீர்வு தொடர்பிலான எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது.
இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வினை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
அந்த அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டில் சமத்துவான சமஸ்டி அடிப்படையிலான தீர்வினையே வலியுறுத்தி வருகின்றோம்” என்றார்.