இலங்கையில் தங்கநகைகளை விற்கும் மக்கள்
கடும் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்து செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிமெந்து மற்றும் கல், மணல் விலைகள் அதிகரிப்பால் கட்டட தொழிலாளர்கள் பலர் வேலையை இழந்துள்ளனர்.அத்துடன் அதனுடன் தொடர்புடைய தச்சு வேலை செய்வோர், வர்ண பூச்சாளர்கள் என அவர்களும் தமது தொழிலை இழக்க நேரிட்டுள்ளது.
தங்க நகைகளை விற்கும் மக்கள்
இந்த நிலையில் தமது வாழ்வாதாரத்தை நடத்திச் செல்வதற்காக தம்மிடமுள்ள தங்க நகைகளை விற்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நகை கொள்வனவு வீழ்ச்சி
அத்துடன் புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது தங்க நகைகளை மக்கள் கொள்வனவு செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.