அரச சேவை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் : வெளியான சுற்றுநிருபம்
இலங்கையின் அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த, பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைய அமைக்கப்பட்ட சபைகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைப் பேச்சாளரின் அறிவிப்பு
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டவாறு, தற்போது அரச நிறுவனங்களில் தற்காலிக, பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இதன் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஏற்கனவே நிவாரண அடிப்படையில் பணியாற்றி, சுற்றுநிருப விதிகளுக்கமைய நிரந்தர நியமனம் பெற்றிருந்தும், அந்த நியமனங்கள் இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்களை முறைப்படுத்துவது தொடர்பான நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

