09 ஏ பெறுபேற்றை பெற்ற மாணவனை எரித்தவர் சிக்கினார்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற 17 வயது மாணவனை எரித்த குற்றச்சாட்டில் 28 வயது இளைஞன், அம்பிட்டியவில் விசேட காவல்துறையினரால் இன்று (29) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அண்மையில் வெளியாகிய சாதாரண தரப் பரீட்சையிலேயே குறித்த மாணவன் 9 ஏ சித்தி பெற்றுள்ளார். சந்தேகநபர் குற்றக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் எனவும், கைது செய்யப்படும் போது அவரிடம் கைக்குண்டு ஒன்று இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீடு திரும்பியவேளை இடம்பெற்ற அசம்பாவிதம்
அம்பிட்டிய, மீகனுவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாதிக்கப்பட்ட மாணவன், சனிக்கிழமை இரவு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
கையில் தீப் பந்தத்தையும், மண்ணெண்ணெய் போத்தலையும் ஏந்திய சந்தேக நபர், மாணவனுக்கு தீவைத்துள்ளார். மாணவனின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்
கண்டி காவல்துறையினர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் குற்றப் பின்னணி கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.