மகிந்தவிற்கு செல்லும் தொலைபேசி அழைப்புகள்
தற்போதைய காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவுள்ளதால், வெற்றிடமாகப் போகும் அந்த பதவிக்கு யாரேனும் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா என காவல்துறை உறுப்பினர்கள் பலர் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காவல்துறை மா அதிபருக்கு அனுமதி
இன்று காவல்துறையினரின் சேவையின் தேவை வலுவாக உணரப்படும் காலமாகும். ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்களில் எப்போதும் என்னை அழைத்து, புதிய காவல்துறை மா அதிபருக்கு அனுமதி அளித்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள்.
காவல்துறை மா அதிபரை நியமிப்பது நான் அல்ல. அரசியலமைப்பு சபை. அதிபர் ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்து அதை அரசியலமைப்பு சபைக்கு அனுப்புகிறார்.
பேச பயப்பட வேண்டாம்
அதிபர் ஒரு மோசமான நபரை காவல்துறை மா அதிபராக நியமிப்பார் என்று நான் நினைக்கவில்லை. குற்றவாளிகளுடன் தொடர்பில்லாத, சட்டம் ஒழுங்கை நன்கு பேணக்கூடிய நல்ல அதிகாரியை அதிபர் நாட்டுக்கு வழங்குவார். எனவே அந்தப் பெயர் வெளிவந்தவுடன் எங்களிடம் பேச பயப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
