காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை மீண்டும் இயக்கத்திட்டம்! (படங்கள்)
புனரமைக்கப்படவுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை பிரதமர் பார்வையிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சென்று பார்வையிட்டுள்ளார்.
1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. இத்தொழில்சாலை 728 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தாலும், தற்போது அதன் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன.
2021 பெப்ரவரி 8 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையின் பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களை தவிர ஏனைய கட்டிடங்களை இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் 80 வீதமான கட்டிடங்களை புனரமைத்து பயன்படுத்த முடியும். அதற்கமைய காங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.




