பேருந்தில் பயணியிடம் திருட்டு காவல்துறை உத்தியோகத்தர் கைது
கொழும்பில் பேருந்தில் இருந்து பயணி ஒருவரிடமிருந்து 1500 ரூபா பணப்பையையும் கையடக்கத் தொலைபேசியையும் திருடியதாக கூறப்படும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பேலியகொட தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவை திருடப்பட்ட அதே வேளையில், பேருந்தில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் சந்தேக நபரைக் கைது செய்து பின்னர் பேலியகொட தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக அப்பகுதியின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாதாரண உடையில் பயணித்தே திருட்டு
காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த உத்தியோகத்தர் சாதாரண உடையில் இருந்தே இந்த திருட்டை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள காவல் நிலையத்தில் கடமையாற்றுகின்றார்.
பெண் அளித்த புகார்
கடந்த 15ஆம் திகதி பெடகொட்டோவில் இருந்து கடவத்தை நோக்கிச் சென்ற பேருந்தில் சுகததாச மைதானத்திற்கு அருகில் பயணித்த சந்தேகநபரான உத்தியோகத்தர் தனது கைத்தொலைபேசியைத் திருடியதாக வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
பேலியகொட காவல்துறையினர் குறித்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இந்த உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.