எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலதிபர் - காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
குருநாகல் (Kurunegala) - மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது
குருநாகல் (Kurunegala) - மில்லாவா பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஹோட்டல் தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்க ஆபரணங்களை அடகு
குறித்த தொழிலதிபர் முடி வெட்டப் போவதாகக் கூறி ஜீப்பில் வீட்டை விட்டுச் சென்றதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது கையடக்க தொலைபேசியும் இயங்காமல் போயுள்ளது. இதனால் அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், கட்டம்புவ பகுதியில் கால்நடைகளை பார்க்கச் சென்ற ஒருவர், ஜீப்பில் ஒருவர் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள்
அவர் இறப்பதற்கு சற்று முன்பு தங்க ஆபரணங்களை அடகு வைத்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 2.5 மில்லியன் ரூபாவை காவல்துறையினர் அவருடைய காரில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பெருந்தொகை பணம் எந்த நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் அது கொலையுடன் தொடர்புடையதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்த வர்த்தகரின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வர்த்தகரின் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 காவல்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
