வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் பாரிய ஆபத்தில் முடியும் - கடுமையாக எச்சரிக்கிறார் கம்மன்பில
வடக்கில் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் முன்னர் இருந்ததை போன்றே தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ள உத்தர லங்கா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படுவதில் பாரிய ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, சர்வதேச ரீதியில் உருத்திரகுமாரனும் தேசிய ரீதியில் எம்.ஏ.சுமந்திரனும் பிரிவினைவாதத்தை முன்கொண்டு செல்கின்றார்கள் எனவும் சாடியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக

அடுத்த அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வவதற்காக13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அதிபர் ரணில் பேச்சு நடத்தியுள்ளார்.அந்த சந்திப்பில் காவல்துறை அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்த இணங்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை, மாலை இது தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிபர் அனைத்து கட்சிக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.இந்த பின்புலத்தில் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இதனை நாட்டிற்கு நாம் தெரியப்படுத்த வேண்டும்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, பின்நோக்கி சென்றமை கடந்த காலத்தை பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்

இந்த நாட்டில் திடீரென அதிபரான ரணில் விக்ரமசிங்கவிற்கு முதலில் இருந்த ஏழு அதிபர்களும் 13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள காவல்துறை அதிகாரத்தை வழங்காமல் இருந்ததற்கு காரணங்கள் இருந்தன.
எமது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் பிரிவினைவாதம் தற்போதும் காணப்படுகின்றது.தேசிய ரீதியில் உருத்திரகுமாரன், தீபேத் மற்றும் பலஸ்தீனத்தில் செய்ததை போன்று நிலமற்ற தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கி, அதன் பிரதமராகவும் செயற்படுகின்றார்.இதன்பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் நாட்டிற்குள் பிரிவினை செயற்பாட்டை முன்னெடுக்கின்றார்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரிவினைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் தருணத்தில் எந்தவொரு தருணத்திலும் பயங்கரவாதம் மீண்டும் எழக் கூடிய ஆபத்து காணப்படும் சூழுலில் வடக்கிலுள்ள தொல்பொருட்களின் அழிவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணைபோகும் நிலையில் அவர்கள் செயற்படும் விதத்தை பார்க்கும் போது அவர்கள் மிகவும் பகை மனப்பான்மையுடன் உள்ளனர் என்பது புலனாகின்றது.
ஆகவே பிரிவினைவாதம், மற்றும் பயங்கரவாதம் மீண்டும் எழும் ஆபத்து அதேபோன்று உள்ளது.மீண்டும் யுத்தமொன்று ஏற்படக் கூடிய பின்னணியில் வடக்கிற்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் வடக்கிலுள்ள காவல்துறை படைகளுக்கு இடையே தான் ஏற்படும் என்றார்.