யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய காவல்துறையினர்
யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (02) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதியிடும் நடவடிக்கைகள்
இதையடுத்து, கஞ்சா இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கஞ்சாவை பொதியிடும் நடவடிக்கைகள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்காக இரண்டு ஊடகவியலாளர்கள் இளவாலை காவல் நிலையத்திற்கு சென்று தாங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரிய நிலையில், இளவாலை காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு உடனடியாக பதில் கூறாமல் அசண்டயீனமாக செயற்பட்டுள்ளார்.
பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்மதித்தால் செய்தி சேகரிப்பில் ஈடுபடுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்பு விசேட அதிரடிப்படையினரிடம் சென்ற ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி விட்டு செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர்
கஞ்சாவை பொதியிட்ட பின்னர் காணொளி எடுக்கலாம் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்த நிலையில், அதற்கு சம்மதம் தெரிவித்த ஊடகவியலாளர்கள் வெளியே காத்திருந்தனர்.
இதன்போது இளவாலை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்து ஊடகவியலாளர்களை பார்த்து நீங்கள் யார் ? ஏன் வந்தீர்கள் என வினவியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர்கள் நடந்தவற்றை தெரிவிக்க உடனே குறித்த இளவாலை காவல்துறை உத்தியோகத்தர் ஊடகவியலாளர்களை மிரட்டும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களை கைப்பேசி பாவனை செய்ய வேண்டாம் என்றும், யாருடனும் அழைப்பு எடுத்து பேசக்கூடாது என்றும், கைப்பேசிகளை உள்ளே வைக்குமாறும் மிரட்டியுள்ளார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர்கள், தாங்கள் தனிப்பட்ட விடயத்துக்கு கைப்பேசியை பாவிப்பதாக கூறிய பின்னரும் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீண்டும் அவர்களை மிரட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களை செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது போலவே குறித்த காவல்துறை உத்தியோகத்தரின் செயற்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநாகரிகமான செயற்பாடு
இதன்போது காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிகமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊடகவியலாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இளவாலை காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் கசிப்பு உள்ளிட்ட பல்வேறு போதைவஸ்துகள் விற்பனை மற்றும் பாவனை இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் காவல்துறையினர் உரிய கவனம் செலுத்தாமல் இருக்கும்போது இராணுவத்தினரும் மற்றும் விசேட அதிரடிப்படையினருமே பெரும்பாலான கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காவல்துறையினரும் இவ்வாறான குற்றச்செயல்கள் புரிபவர்களுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றனவா என மக்கள் ஏற்கனவே பல தடவைகள் சந்தேகம் வெளியிட்டு வந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய செயற்பாடானது காவல்துறையினர் தங்களது பிழைகளை மூடிமறைக்க முற்படுகின்றனரா ? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வேறு இடத்தில் இருந்து வருகின்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் இவ்வாறான கைதுகள் முன்னெடுக்கப்படும் போது, குறித்த பகுதியில் நிலையாக உள்ள காவல் நிலையத்தில் கடமை புரியும் காவல்துறை அதிகாரிகளும், காவல்துறை உத்தியோகத்தர்களும் கைதுகளை முன்னெடுக்காது உள்ளமை மக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
