கடற்படை முகாம் அருகே பட்டப்பகலில் பாரிய துணிகர கொள்ளை - சிறிலங்கா இராணுவ சாரதி உட்பட இருவர் கைது
20 இலட்சம் ரூபா பணத்தை துணிகரமாக திருடிய இரு சந்தேகநபர்களை துரத்திச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இராணுவ சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் தன்னை கடற்படை கப்டன் என போலியாக அறிமுகப்படுத்தி 20 இலட்சம் ரூபாவை திருடியுள்ளார்.
ஒரு தொழிலதிபரிடம், புனே கடற்படை தளத்தில் கேள்வி கோரல் முறையில் டீசல் மற்றும் ஓயில் வழங்கப்படும் என்றும், 22 இலட்சம் மதிப்பிலான 20 பரல் டீசல் மற்றும் ஓயில் இன்று கேள்வி கோரல் முறையின்றி 20 இலட்சத்துக்கு பெறலாம் என்றும் கூறினார்.
20 இலட்சத்தை பெற்ற சந்தேக நபர்கள்
அதன்படி சந்தேகநபர்களின் அறிவுறுத்தலின்படி குறித்த வர்த்தகர் பணத்துடன் வாடகை லொறியில் புனே கடற்படை தளத்திற்கு அருகில் வந்துள்ளார். அங்கு முதலில் அவர்கள் அருகில் வந்த சந்தேகநபர்கள் முகாமிற்குள் செல்ல அனுமதி பெற்றுத்தருவதாக தெரிவித்து தொழிலதிபரின் அடையாள அட்டை மற்றும் லொறி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வாங்கி கடற்படை முகாமின் பிரதான வாயிலுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் திரும்பி வந்து தொழிலதிபரிடம் அதற்கு அனுமதி உள்ளதாகவும் அதற்கான 20 இலட்சத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் கூறினர். இவ்வாறு தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், பின்னால் லொறியை ஓட்டுமாறு கூறிவிட்டு திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துரத்திய தொழிலதிபரும்,காவல்துறையும்
பின்னர், தொழிலதிபரும் அந்த லொறியில் அவர்களை துரத்தினார். அப்போது புனே நகரில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ரன்பண்டா மோட்டார் சைக்கிளை அவதானித்து அதனை நிறுத்துமாறு சைகை செய்த போதும் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக சந்தேக நபர்களை துரத்த ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களமிறங்கிய மோட்டார் சைக்கிள் படையணி
உடனடியாக செயற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ரன்பண்டா, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தொடர்பில் மதவாச்சியில் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் கடமையாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார். அதன்படி, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டிய போதும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று இக்கிரிகொல்ல பாடசாலைக்கு அருகில் தப்பிச் சென்று கொண்டிருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி மற்றும் புனேவ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறையினரின் உடனடி நடவடிக்கையால், நடக்கவிருந்த பெரிய திருட்டை தடுக்க முடிந்தது.