திலினி பிரியமாலி விடயத்தில் சிக்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள் - கோடிக்கணக்கில் கைமாறிய பணம்
டிகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு இலங்கை அரசியல்வாதிகள் குழுவொன்று பல கோடி ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் அவர்களில் எவரும் இது தொடர்பாக முறைப்பாடு அளிக்க முன்வரவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (19) கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், தமது திணைக்களப் பொறுப்பில் உள்ள சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பான பல ஒலிநாடாக்கள், குறுஞ்செய்திகளில் இது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அரசியல்வாதிகள் கொடுத்த பணம்

சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் சந்தேக நபருக்கு பணம் கொடுத்து திருப்பிக் கேட்டது, அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் வாக்குமூலம் அளித்து பணம் கொடுப்பதைத் தவிர்ப்பது ஒலி நாடாக்கள் மற்றும் குறுஞ்செய்திகளின் மூலம் உறுதி செய்யப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, உரிய பணம் எவ்வாறு பெறப்பட்டது? அவற்றுக்கு என்ன ஆனது? இந்தப் பணம் கருப்புப் பணமா என்பது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விரைவில் பலர் கைது

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.