இலங்கை விவகாரத்தில் பரிசுத்த பாப்பரசர் தலையீடு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நீதிக்கான போராட்டத்தில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் (pope francis) ஆதரவு கொடுத்து வருவதாக அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அருட்தந்தை சிரில் காமினி இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை குறித்தான கவலையினை கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிக்கான செயற்றிட்டத்திற்கு தம்மாலான சகல உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக பரிசுத்த பாப்பரசரும் பதிலளித்துள்ளார்.
அரசாங்கம், தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் தவறிவிட்டது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சதியிருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் டப்புல்ல டி லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்த வேண்டும்.
தாக்குதல் சம்பவம் குறித்து, சர்வதேச சமூகம் மற்றும் கத்தோலிக்க அமைப்புக்களை விளக்கமளிக்கும் செயற்பாட்டை ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
நீதிக்கான பொறிமுறையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடுவதை நாட்டைக்காட்டிக் கொடுக்கும் செயலாக பார்க்காமல், மக்களுக்கான ஒத்துழைப்பாக பார்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை கத்தோலிக்க திருச்சபை தொடர்ந்தும் போராடிவரும்” என்றார்.