ட்ரம்பின் ஆயுதமயமாக்கல் நிதிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிபதிமன்றம்
அரசாங்கத்தின் ஆயுதமயமாக்கல் என்று கூறப்படும் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் ட்ரம்ப் நிர்வாகம் உருவாக்க முயன்ற சுமார் 1.8 பில்லியன் டாலர் நிதியத்தை அமைப்பதற்கு அமெரிக்க நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது.
வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி லியோனி பிரிங்கேமா வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி, கூடுதல் வாதங்களை விசாரிக்கும் வரை ட்ரம்ப் நிர்வாகம் இந்த நிதியை அமைக்கவோ, இயக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என உத்தரரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தடை உத்தரவு குறைந்தபட்சம் ஜூன் 12 வரை நடைமுறையில் இருக்கும்.
ஆயுதமயமாக்கல் எதிர்ப்பு நிதியம்
கடந்த வாரம் நீதித்துறை அறிவித்த இந்தத் திட்டப்படி, ட்ரம்ப்பின் வரிப் பதிவுகள் கசிந்த விவகாரத்தில் உள்நாட்டு வருவாய் சேவைக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ‘ஆயுதமயமாக்கல் எதிர்ப்பு நிதியம்’ உருவாக்கப்பட்டது.

இதில் 1.776 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டு, ஐந்து பேர் கொண்ட ஆணையத்தின் மேற்பார்வையில் பணம் வழங்கப்படும்.
ட்ரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்களுக்கு எதிரான வழக்குகளை சட்டப் போர் மற்றும் ஆயுதமயமாக்கல் என்று வர்ணித்து வரும் நிலையில், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என நிரூபிப்பவர்களுக்கு இந்த நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடை உத்தரவு
எனினும் இந்த நிதியை எதிர்த்து டெமாக்ரசி ஃபார்வர்ட் அமைப்பு தொடுத்த வழக்கில் நீதிமன்றம் குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிதியம் ட்ரம்பின் அரசியல் ஆதரவாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் ரகசிய நிதியம் என பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
டெமாக்ரசி ஃபார்வர்ட் வழக்கு உட்பட மொத்தம் மூன்று வழக்குகள் இந்த நிதியத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளன.
நீதிபதி பிரிங்கேமா, நிதிகள் மீளமுடியாத வகையில் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கவும், வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் வரை தற்போதைய நிலையைத் தக்கவைக்கவும் இந்தத் தற்காலிகத் தடை அவசியம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |