இறுதிநேரத்தில் ஒத்தி வைக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் தெரிவுக்கான வாக்குப்பதிவு
இணையத்தள ஊடுருவல் எச்சரிக்கை
இணையத்தள ஊடுருவல் எச்சரிக்கையை அடுத்து பிரிட்டன் பிரதமர் தேர்வுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சனுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. முதல் சுற்றில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ரிஷிசுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னேறினர்.
வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
இறுதிச்சுற்றில் சுமார் 1.80 இலட்சம் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்து கட்சி தலைவரையும் அதன் மூலம் அடுத்த பிரதமரையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இறுதிச்சுற்றுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் தகவல் தொடர்பு தலைமையகத்தின் ஒரு பிரிவான இணையதள பாதுகாப்பு மையம், கொன்சர்வேட்டி கட்சிக்கு ஒரு பரிந்துரையை வழங்கி உள்ளது. பிரதமரை தேர்ந்தெடுக்க கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களித்தாலும், பின்னர் இணையதளம் மூலம் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முடிவுகளை மாற்றுவதற்கான அபாயம்
இணையதளம் மூலம் வாக்களிக்கும்போது, சட்ட விரோதமாக ஊடுருவி முடிவுகளை மாற்றுவதற்கான அபாயம் உள்ளது என்றும், இந்த நடைமுறை தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இணையதள பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து வாக்களித்த உறுப்பினர்கள் தங்களது முடிவுகளை மாற்றி மீண்டும் வாக்களிக்கும் நடை முறையை நீக்க கொன்சர்வேட்டிவ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இணைய தள ஊடுருவலில் இருந்து தப்ப வாக்களிப்பு முறையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாக்குப் பதிவை சற்று தாமதமாக நடத்த கொன்சர்வேட்டிவ் கட்சி முடிவு செய்துள்ளது.
