யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (24) சம்பிரதாயபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.
குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் தலைமையில் மதத் தலைவர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள், பிரதேச சபை செயலர்கள், மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்துறைசார் பொறுப்பு நிலை அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்துக்கு தனது பாரியாருடன் வருகைதந்த மாவட்ட செயலாளரை, மேலதிக மாவட்ட அரச அதிபர் ஸ்ரீமோகன் மாலை அணிவித்து வரவேற்றிருந்தார்.
அரச அதிபராக நியமனம்
அதைத்தொடர்ந்து சக ஊழியர்களால் வரவேற்கப்பட்ட அரச அதிபர் பிரதீபன் மாவட்ட செயலரின் அதிகாரபூர்வ அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல மாதங்களாக மாவட்ட அரச அதிபர் வெற்றிடம் இருந்துவந்த நிலையில் பதில் அரச அதிபராக கடமையாற்றிவந்த ம.பிரதீபன் சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





