தமிழர் தாயகத்தில் பாரிய எழுச்சி போராட்டம் - முன்னாயத்த பணிகள் தீவிரம்
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிடல்களை முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
தமிழர் தாயகத்தை பொறுத்த வரையில் சிறிலங்கா சுதந்திர தினம் கரிநாளாக கடைபிடிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
மக்கள் எழுச்சி பேரணி
சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி போராட்டத்திற்கான முன்னாயத்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று, யாழ் மலை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்து பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கரி நாள் போராட்டத்திற்கான சுவரொட்டிகளும் ஒப்பட்டுள்ளன.
தமிழர் தாயத்தில் போராட்டம்
இதன்படி எதிர்வரும் சுதந்திர தினத்தில் தமிழர் தாயத்தில் பாரிய எழுச்சி போராட்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை வழமைக்கு மாறாக இந்த முறை தென்னிலங்கையிலும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.