கடற்றொழில் சமாசங்களின் தலைவர் ஊடகவியலாளர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாக காட்டி எமது கடற்றொழிலாளர்களையும் சிறிலங்கா கடற்படையினரையும் முரண்பாட்டு நிலைக்குக் கொண்டுசென்று உண்மையான எமது வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தை திசைதிருப்பி பலவீனப்படுத்த இந்திய ஊடகங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு எமது ஊடகங்கள் இடம் கொடுக்காது உண்மைத் தன்மையை இலங்கையில் மட்டுமல்லாது தென்னிந்திய ஊடகங்களுக்கும் கொண்டு செல்லுமாறு ஊடகவியலாளர்களிடம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லைதாண்டிய சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்களுக்கு எதிராக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனம் மற்றும் குறித்த பிரதேசங்களின் கடற்றொழில் அமைப்புக்கள் இணைந்து வாராந்தம் வெள்ளிக்கிழமை தோறும் யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் முன்றலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சிறிலங்கா கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது. இந்த செய்தியை யாழ்ப்பாணத்திலுள்ள சில பத்திரிகைகளும் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளமை வேதனையளிக்கின்றது.
எமது நாட்டு கடற்படை தாக்கியதாக இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வந்தவுடன் அதை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் உடனடியாக வெளியிடுகின்றன.
ஆனால் எமது போராட்டத்தின் உண்மைகளை வெளியிடுவதில் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.அந்தவகையில் எமது ஊடகவியலாளர்களிடம் நாம் கோருவது உண்மையான செய்திகளை அறிந்து அதை உண்மைத் தன்மையுடன் வெளியிட வேண்டும் என்பதே.
இதேவேளை நாம் கடந்த 10 வருடங்களாக சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்களால் பலகோடி சொத்துக்களையும் பொருளாதார வழங்களையும் இழந்து தவிக்கின்றோம்.
எமது அரசாங்கத்திடமும் கடற்படையினரிடமும் இதை நிறுத்துமாறு கோரி நாம் நாளாந்தம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் எமது போராட்டத்தின் உண்மை நிலையை இந்திய ஊடகவியலாளர்களுக்கு இங்குள்ள ஊடகவியலானர்கள் எவ்வாறு கொண்டு சேர்க்கின்றீர்கள் என்பதே கேள்வியாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டால் அதை உடனடியாக முன்னுரிமை கொடுத்து இங்கு வெளியிடுகின்றீர்கள். அத்துடன் எமது நாட்டு கடற்படை மீது குற்றம் சாட்டி அல்லது கடற்படையினரை பழி சுமத்தி அதனூடாக எமது கடற்றொழிலாளர்களையும் கடற்படையினரையும் முரண்படும் நிலையை உருவாக்கும் செய்திகளை தயங்காது பிரசுரிக்கின்றீர்கள்.
தயவு செய்து இவ்வாறு வெளியிடாதீர்கள். நாங்களும் இந்த மாவட்டத்துக்குரிய கடற்றொழிலாளர்கள் எமது செய்திகளை உண்மைத்தன்மையுடன் வெளியிட்டு எமது போராட்டத்திற்கும் எமக்கும் ஆதரவை தாருங்கள் என்றே நாம் ஊடகங்களிடம் கோருகின்றோம். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களை கைது செய்வதற்கும் கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் பறிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
இதேவேளை தமிழ் நாட்டு மீனவர்கள் எமது கடற்பரப்பின் முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு அவர்களது தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் முரண்படும் நிலைக்கு கொண்டு செல்லும் செய்திகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்களால் இந்தியாவின் எல்லைகளான பாகிஸ்தான் சீனா போன்ற கடற்பரப்புகளுக்கு சென்று இவ்வாறு சட்டவிரோதமாக அத்துமீறி தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு இவ்வாறான போலி செய்திகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வீர்களா?
நாம் தொப்புள்கொடி உறவு என்று கூறும் நீங்கள் எமது முற்றத்தில் வந்து தவறான செயலை செய்துவிட்டு எமது கடற்படை மீதும் எம்மீதும் குற்றத்தை சுமத்தும் உங்களது செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய குற்றச்சாட்டுக்களை தமிழ் நாட்டிலிருந்து இயங்கும் ஊடகங்களும் சரி மீனவரும் சரி பொய்களை கூறாது உண்மைகளை கூறுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோன்று எமது தேச பத்திரிகையாளர்களே தொடர்ந்தும் உங்களது ஆதரவை நாம் எதிர்பார்க்கின்றோம். உங்கள் சரியான செய்திகளை எமது போராட்டம் வெற்றிபெறும் வரை எம்மை முதன்மைப்படுத்தி நியாயப்படுத்தி ஆதரவை தொடர்ந்தும் தயவுசெய்து தாருங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.