இளம் கவிஞரை பயங்கரவாதியாக்கியது இலங்கை சட்டம்!
சிறிலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுவிழாவில் நீண்ட காலம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆரூரன் சிறைசாலையில் இருந்து எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருதை இலங்கை அரசாங்கம் வழங்கி கெளரவித்திருந்தது.
இதே போன்று தனது 23 ஆவது வயதில் “நவரசம்” என்ற கவிதை நூலில் “உருவாக்கு” என்ற வன்முறைக்கு எதிரான கவிதை ஒன்றை எழுதிய இளைஞன் ஒருவன் புலனாய்வு பிரிவினரால் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு தீவிரவாதியாக்கப்பட்ட சம்பவமும் அதே சிறிலங்கா அரசாங்கத்தினாலேயே அரங்கேறியிருந்தது.
பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்ட அஹ்னாப்
அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட நபர்கள், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்கள், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பிலான பெயர் பட்டியலில் இடம் பிடித்த அஹ்னாப் ஜெசீமே அவர். மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவில் சிலவத்துறை பண்டாரவெளி பகுதியை சேர்ந்த அஹ்னாப் ஜெசீம் பேரதனை பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை படித்துவந்தார்.
7 பேர் கொண்ட குடும்பத்தில் இவரே மூத்த பிள்ளை. புத்தளம் நுரைச்சோலை கொய்யாவாடி முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் சாதரண தர பரீட்சையில் தோற்றிய பின்னர் அஹ்னாப் ஜாமியா நளிமியா உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி கற்றுள்ளார். ஆங்கிலம், அரபு, சிங்கள மொழியை பேச கூடிய புலமை பெற்ற அஹ்னாப் சிறுவயதில் இருந்து கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டுள்ளார்.
உயர் கல்வி கற்றுகொண்டிருந்த அதே நேரம் அஹ்னாப் 2019 ஆம் ஆண்டு “ஸ்கூல் ஒப் எஸ்சலனஸ்” எனும் தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஜாமியா நாளிமியா உயர்கல்வி நிறுவனத்தில் கல்வி கற்று வந்த சமயத்தில் 2017 ஆம் ஆண்டு யூலை 2 ஆம் திகதி “நவரசம்” எனும் கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டிருந்தார்.
அந்த நூல் அன்றைய நாளில் அஹனாப்பை சிறந்த கவிஞர் ஆக்கியிருந்ததுடன் பலரின் பாராட்டையும் பெறவைத்திருந்தது. ஆனால் அதே கவிதை நூல் இலங்கையில் 2019 ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் அஹ்னாப்பை தீவிரவாதி ஆக்கியிருந்தது. ஈஸ்டர் குண்டுதாக்குதல் பலரின் வாழ்கையை புரட்டி போட்டது போன்று அஹ்னாப் ஜெசீமின் வாழ்க்கையையும் புரட்டி போட்டது.
போராட்ட கருத்துக்கள் போதிப்பதான குற்றம்
ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் அஹ்னாப் சிறிலங்கா அரசாங்கத்தினால் பயங்கரவாதி ஆக்கப்பட்டு இலங்கையில் நடைமுறையில் உள்ள மிக மோசமான மனித குலத்திற்கு எதிரான சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அஹ்னாப் தீவரவாத செயற்பாடுகளை ஊக்கிவித்தல், மற்றும் தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தீவிரவாத கருத்துக்களை போதிப்பதாக தெரிவித்து 2020 ஆம் ஆண்டு தீவிரவாத தடுப்பு பிரிவினரால் அதிரடியாக இரவு நேரத்தில் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு எவ்வித ஆதாரங்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு உடல்,உள ரீதியாக மிக மோசமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
சுமார் 19 மாதங்கள் அஹ்னாப் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மன ரீதியாக அழுத்தங்களுக்கு ஆளக்கப்பட்டதாகவும் அஹ்னாப்பின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். வன்முறையையே விரும்பாத தனது மகன் வன்முறையையையும் தீவிரவாதத்தையும் தூண்டியதாக கைது செய்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகவும் அவனுடையை இளமை பருவம் சிறையிலேயே சீரழிந்ததாகவும் அஹ்னாப்பின் தாய் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பிண்ணனியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டதொடரில் அதன் ஆணையாளர் மிச்செல் பச்செலேட் உரையாற்றிய போது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டிப்பதாகவும் இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான காலம் வரையறை செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
உளவியல் ரீதியான துன்புறுத்தல்
இவ்வாறு ஐ.நா மனித உரிமை பேரவை உட்பட இலங்கை நாடாளுமன்றம் , ஐரோப்பிய நாடாளுமன்றம் வரை அஹனாப்பை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை அடுத்து அஹ்னாப் கடந்த மார்ச் மாதம் புத்தளம் மேல் நீதிமன்றத்தால் உரிய விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
விடுதலையின் பின்னர் 2022 ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது அமர்வில் காணொளி ஒன்றின் ஊடாக கூட்டத்தொடரில் உரையாற்ற கிடைத்த நிலையில் அஹ்னாப் பல விடயங்களை சுட்டிகாட்டியிருந்தார். குறிப்பாக தான் இலங்கையின் கொடிய பயங்கரவாத தடுப்புசட்டத்தினால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சட்டம் நாட்டின் மனித உரிமையை பலியெடுக்கின்றது எனவும் நான் இந்த சட்டத்தின் கீழ் 19 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டேன் எனவும் அந்த 19 மாதங்களிலும் எனது சுகந்திரம் ஜனநாயகம் பிடிங்கி எடுக்கப்பட்டதாகவும் அஹ்னாப் உரையாற்றியிருந்தார். பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஒரு வருடம் தடுத்து வைகப்பட்டு கடுமையான முறையில் விசாரிக்கப்பட்டதுடன் 7 மாதங்கள் மீண்டும் விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டதாகவும் உடல் ரீதியாக மாத்திரம் இல்லாமல் உளவியல் ரீதியாகவும் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிருத்திருந்தார்.
இவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்ட பயங்கங்கரவாத தடைசட்டத்தினால் பாதிக்கப்பட்டதில் கண்கண்ட ஒரு உதாரணமே அஹ்னாப். அவரை போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இன்னும் உரிய விசாரணைகள் இன்றியும் குற்றச்சாட்டுகள் எதுவும் இன்றியும் சந்தேகத்தின் பேரில் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
ஒரு நாட்டின் சட்டம் அந்த நாட்டின் குடிமக்களின் ஜனநாயக ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாகவே அமைய வேண்டும். ஆனாலும் இலங்கையின் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பல இளைஞர்களின் வாழ்கை சிறைக்குள்ளே முடக்கிப் போடப்படுகின்றது.
தமிழ் இளைஞர்கள் மீது பாய்ந்த சட்டம்
இந்த சட்டத்தின் ஊடாக கைது செய்யப்படும் பலரில் அஹ்னாப் போன்ற சிலர் விடுதலை பெற்றாலும் இன்னும் எண்ணிக்கை இல்லாத அளவிலான தமிழ் இளைஞர்கள், முஸ்லிம் இளைஞர்கள் சிறையிலேயே தமது வாழ்கையின் இளமை காலத்தை இழக்கின்றார்கள். இலங்கையின் முப்பது ஆண்டு யுத்த காலப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மீது இந்த சட்டம் ஆயுதமுனையில் திணிக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்புக்கு பின்னர் இந்த பயங்கரவாத தடை சட்டம் முஸ்லிம் இளைஞர்கள் மீதும் 2022 ஆம் ஆண்டு கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்கள் மீதும் பல வந்தமாக திணிக்கப்பட்டது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினரால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஆதரவு வழங்கி கையொப்பமிட்டிருந்தனர். அதே நேரம் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த பயங்கரவாத தடைசட்டத்கை நீக்க கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
ஐ.நாவில் பகிரங்கம்
இருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் பல தரப்பட்ட சமாளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதே தவிர இந்த பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாக சர்வதேச தரத்திலான அனைவராலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஜனநாயக ரீதியான மாற்று சட்டமூலத்தினை இதுவரை முன் வைக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வெளியுறவு துறை அமைச்சராக ஜி.எல் பீரிஸ் செயலாற்றிய போது பயங்கரவாத தடைசட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதே நேரம் புதிய நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஸ நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு போதும் மாற்றியமைக்கப்படாது எனவும் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய சட்டமூலமே தயாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இவ்வாறான முரண்பாடான கருத்துக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுவதை பல மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்து வருவதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க்குவதற்கான கோரிக்கைகளையும் தொடர்சியாக முன்வைத்து வருகின்றனர்.
தற்போது வரை பயங்கரவாத தடை சட்டத்தினால் கைது செய்யப்பட்ட 33 தமிழர்களும், 400 முஸ்லிம்களும்,1 சிங்களவரும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மனிதாபிமானம் இன்றி இடம்பெறும் இவ்வாறான கைதுகள் மற்றும் இவ்வாறான காட்டுமிராண்டி சட்டங்களினால் நாட்டிற்கு எந்த விடிவோ, அபிவிருத்தியோ, சுபீட்சமோ, ஏற்படபோவதில்லை எனவும் இன ரீதியான முரண்பாடும், இளைஞர்கள் பலரின் வாழ்கை சிறைக்குள்ளே முடங்கும் சம்பவங்கள் மாத்திரமே இடம்பெறுவதாக அரசியல் கைதிகளுக்காக தொடர்சியாக போராட்டங்களை முன்னடுத்துவரும் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.
இன அழிப்பை மேற்கொள்ளும் இன்னொரு முகமே
மேலும் இலங்கையில் அடுக்கு முறைகளை கட்டுப்படுத்துவதற்கு அப்பால் இன அழிப்பை மேற்கொள்வதற்கான இன்னொரு முகமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை தாங்கள் பார்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார். அரசியல் ரீதியாக இருக்கும் பிரச்சினைகளை பயன்படுத்தி ஒரு இனத்தின் அரசியலை அமைதி ஆக்கி சமூக சிதைப்பை மேற்கொள்ளவே இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
இலங்கையில் இளைஞர்களை அரசியல் நீக்கம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கான எழுச்சியையும் நியாயமான கோரிக்கைகளையும் மக்கள் புரட்சியையும் பயங்கரவாதம் என முடக்குவதற்கே அந்த சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துவதாக அருட்தந்தை தெரிவிக்கின்றார். இந்த சட்டத்தால் கைது செய்யப்படுபவர்களோ, தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களோ, பயங்கரவாதிகள் இல்லை மாறாக இப்படி ஒரு மோசமான சட்டத்தை கொண்டு வந்தவர்களும் இன்று வரை அந்த சட்டத்திற்கு ஆதரவு வழங்குபவர்களும் அந்த சட்டம் தொடர அனுமதித்தவர்களும் இம்மோசமான சட்டத்தை வேடிக்கை பார்பவர்களுமே உண்மையில் பயங்கரவாதிகள் என அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.
பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டுவரப்பட்டாலும் பின்னர் 1982 ஆம் ஆண்டு அது நிரந்தரமாக்கப்பட்டது. இந்த சட்டம் ஒரு பாரதூரமான சட்டமாக இருப்பதாலும் ஜனநாயக உரிமைகளை மீறுவதாக இருப்பதனாலுமே மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற அமைப்புக்கள் நிறுவனங்கள் என அனைத்தும் இந்த சட்டம் இருக்க கூடாது என போராடி வருவதாக அரசியல் கைதிகள் தொடர்பாக செயற்படும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
மேலும் ஒரு ஜனநாயகத்தை பின்பற்றுகின்ற நாட்டில், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், சட்டவாட்சி, விழுமியங்களை பேசுகின்ற நாட்டில் இவ்வாறான சட்டங்கள் மனித உரிமைகளை மீறுகின்ற சட்டங்களாக காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். அத்துடன் 42 வருடங்களாக இந்த சட்டம் இலங்கையை ஆட்சி செய்து வருகின்றது. இந்த சட்டத்தினால் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர்.
பிரஜைகளின் சுதந்திரம் பறிப்பு
அவர்களின் வாழ்கை இழக்கப்பட்டது பலர் அதில் காணமல் ஆக்கப்பட்டனர், சிலருக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை, இன்னும் சிலர் என்ன வழக்கு என தெரியாமலே சிறைகளில் வாழ்வதாக அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு ஒரு பிரஜையின் பேச்சு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், கருத்து தெரிவிக்கும் சுதந்திரம், குடும்பத்தோடு இணைந்து வாழும் சுதந்திரம், தமக்கு பிடித்த தொழிலை செய்யும் சுதந்திரம், என பல சுதந்திரங்கள் இச் சட்டதினால் மறுக்கப்படுவது மாத்திரம் இல்லாது அவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாகும் சம்பவங்களும் இடம்பெறுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசங்கத்தின் முப்படையினருக்கு இந்த சட்டத்தின் ஊடாக எதேர்சையான அதிகாரம் வழங்கப்படுகின்றது. அவ்வதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுவதை காணக்கூடியதாக உள்ளது. ஏனைய நாடுகளிலும் இது போன்ற சட்டங்கள் காணப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்தும் அரச இயந்திரம் பாரபட்சம் இன்றி நியாயமான முறையில் அந்த சட்டத்தை பயன்படுத்துவதால் அந்த நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றசாட்டுக்கள் ஏற்படுவதில்லை.
சட்ட மாற்றத்திற்கு வலியுறுத்தல்
ஆனால் எமது நாட்டில் ஒழுங்கான நிர்வாக நடைமுறை இல்லாமையினால் பழிவாங்குவதற்காகவும், அரச எதிர்பாளர்களை ஒடுக்குவதற்காகவும், ஒரு இனத்தை நசுக்குவதற்காகவும்,கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்கும் என இந்த சட்டம் பயன்பட்டிருப்பதுடன் இனியும் பயன்படுத்துவதற்கான வாய்புக்கள் அதிகம் இருப்பதனாலேயே இந்த சட்டம் இலங்கையில் மாற்றப்பட வேண்டும் என நாங்கள் கேட்கின்றோம் என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தீவிரவாதம் மற்றும் அதற்கு ஆதரவான செயற்பாடுகள் முற்றிலும் தடுக்கப்படவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கப்போவதில்லை ஆனாலும் தீவரவாதம் பயங்கரவாதம் எனும் போர்வைக்குள் நியாயமான கோரிக்கைகள், கருத்து சுதந்திரம் என்பவற்றை அரசாங்கம் முடக்க முயற்சி மேற்கொள்ளும் போதே இவ்வாறான சட்டங்களுக்கு எதிராக சமானிய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கின்றது.
அனைத்து இன மக்களும் ஏற்கும் சட்டம்
அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய அனைத்து இன மக்களாலும் ஏற்றுகொள்ள கூடிய காத்திரமான சட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னெடுப்புக்களே எமது நாட்டில் எப்போதும் பயங்கரவாத செயற்பாடு தலைதூக்காத வகையில் பலமான கட்டமைப்பை உருவாக்கும் என்பதே நிதர்சனம்.