இலங்கையின் மலர்க் கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - விவசாயிகளும் வியாபாரிகளும் கவலை
இலங்கையில் உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதையடுத்து விநியோகஸ்தர்கள் போராடுவதால், பூங்கொத்துகள் மற்றும் மாலைகள் இப்போது உயர் விலையில் விற்க வேண்டியுள்ளதாக கொழும்பு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அலங்கார மற்றும் அலங்கார பூக்களின் விற்பனை அழிந்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - 10 டீன்ஸ் வீதியிலுள்ள பூ வியாபாரிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
அதிகம் விரும்பப்படும் ரோஜா பூவானது முன்னர் 80 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பூங்கொத்துகள் செய்யக் கூட பூக்கள் பற்றாக்குறையாக உள்ளன.
இதேவேளை, நுவரெலியாவில் தற்போது பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கு உரப் பற்றாக்குறையே பிரதான காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் மலர்க் கிராமம் என அழைக்கப்படும் கெப்பெட்டிப்பொல, வெலிமடை மற்றும் ஊவா - பரணகம ஆகிய பிரதேசங்களில் மலர்கள் தரத்துக்கு பொருந்தாத காரணத்தினால், பூக்களின் அறுவடைகள் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
நாளாந்தம் நூற்றுக்கணக்கான அழுகிய பூக்களை வெட்டி எறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தமது உழைப்பு, பணம், நேரம் என அனைத்தும் கண் முன்னே அழிவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகள் எதுவாக இருந்தாலும், உலகில் எங்குமுள்ள மக்களின் வாழ்வில் பூக்கள் இன்றியமையாத பகுதியாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.