ரணில் ஆட்சியில் தாறுமாறாக அதிகரித்த விலைகள் - திண்டாடும் பொதுமக்கள்
அண்மையில் விதித்த பெறுமதி சேர் வரி
அரசாங்கம் அண்மையில் விதித்த பெறுமதி சேர் வரி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் கட்டடப்பொருட்கள் மற்றும் இறக்குமதிக்கான கட்டுப்பாடு காரணமாக மின்சாதன பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிப்பு காரணமாக புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த மக்கள் முன்வராத காரணத்தால் பலர் வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின் சாதனங்களின் விலைகளில் பாரிய உயர்வு
குறிப்பாக முன்னர் 3800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. பச்சை நிறத்திலான ஓர் உருளை கம்பியின் விலை 7600 ரூபாயில் இருந்து 19,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. சராசரியாக 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மின்குமிழ் தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதே சமயம் ஐந்து வாட் எல்.இ.டி வகை மின்குமிழ் ஒன்று தற்போது 650 ரூபாயாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவை முன்னதாக 300 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
மூன்று மடங்கு அதிகரித்த விலைகள்

அதேபோன்று, பிரதான மின்சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தடையிகளின் விலையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அந்த உதிரிப்பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள பிரதான மின்சுற்று தாங்கிகள் முன்பு சுமார் 700 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், தற்போது 1300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
ஏறக்குறைய 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மின்குமிழ் மட்டும் எரியக்கூடிய ஒற்றை ஆழி தற்போது 400 முதல் 500 ரூபாய் என்ற வகையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய தொலைத்தொடர்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் சரடுகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.