இறுதி நேரத்தில் முடிவை மாற்றிய பிரதமர் மஹிந்த - உறுதியளித்த கோட்டாபய? தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்
சுகாதார அமைச்சரை மாற்றும் முடிவினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இறுதி நேரத்தில் தடுத்து நிறுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது பதவியை தக்கவைத்துகொண்டுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டினால் இது சாத்தியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நம்பப்படும் அமைச்சரவை மாற்றத்தின் போது, ரமேஷ் பத்திரணவுக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
இந்நிலையிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது பதவியை தக்கவைத்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமரின் வேண்டுகோளின் பேரில், பவித்ரா வன்னியாராச்சியை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஊடகத் தலைவர்களை அழைத்த பவித்ரா வன்னியாராச்சி தேவையான நடவடிக்கை எடுத்துள்ளார். ஜனாதிபதி உட்பட 29 பேர் கொண்ட அமைச்சரவையில் பவித்ரா வன்னியாராச்சி மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.