தனியார் பேருந்துகள் இயங்குவது 50 வீதமாகக் குறையும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் என அந்த பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 13,000 தனியார் பேருந்துகள் உள்ளதாகவும் இந்த நடைமுறையினால் 6,500 பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிப்போக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், இதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பேருந்துகளுக்கு எரிபொருள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இது ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறும். எங்களிடம் உள்ள பேருந்துகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு தற்போதுள்ள டிப்போக்களின் எண்ணிக்கை போதாது.

இதனால் நீண்ட வரிசைகள் ஏற்படும். அதேபோல், அவர்கள் இரவு நேரங்களில் டீசல் வழங்குவதில்லை. நாங்கள் சேவையில் ஈடுபட்டுவிட்டுத்தான் எரிபொருள் பெற வருகிறோம்.
ஆனால் டிப்போக்கள் மாலை 5 மணிக்கே மூடப்படுகின்றன. அவ்வாறு நடந்தால் அடுத்த நாள் எம்மால் சேவையில் ஈடுபட முடியாது, வீதியிலேயே கிடக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பொதுப் போக்குவரத்துச் சேவை
இதன் விளைவாக இலங்கை முழுவதும் 50 சதவீத பேருந்துகளை மாத்திரமே இயக்க முடியும். QR நடைமுறைக்கு முன்னதாகவே இதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே கூறினேன்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அறிவோம். ஆனால் ஏழை மக்கள் தனியார் மற்றும் அரச பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு முன்னுரிமை வழங்குங்கள், இல்லையெனில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும். இலங்கையில் உள்ள 13,000 பேருந்துகளில் 6,500 மாத்திரமே ஓடும் நிலை ஏற்படும்." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |