அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள்
அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.
யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது தரப்பினரால் அழைப்பு
இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று (11) அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளில் மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றது. இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எள்ளளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இழுத்தடிக்கின்றனர், அது மாத்திரமின்றி, திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான விடயங்களை கண்டித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |