நாமலுக்கு எதிராகப் பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்...!
ஒக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரைக்கு எதிராகப் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு வருகை தந்து உரையாற்றவிருந்த நிலையில், தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில், பெப்ரவரி 27 அன்று கேம்பிரிட்ஜ் யூனியனில் நடைபெறவிருந்த நாமல் ராஜபக்சவின் உரை ரத்து செய்யப்பட்டது.
மாணவர் அமைப்புகள்
தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் 22-இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் விடுத்த கடும் கண்டனத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போதைய சூழலில் இந்தத் தலைப்பில் சமநிலையான விவாதத்தை நடத்த முடியாது எனக் கேம்பிரிட்ஜ் யூனியன் அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாகப் பெப்ரவரி 25 அன்று ஒக்ஸ்போர்டு யூனியனில் (Oxford Union) நாமல் ராஜபக்ச உரையாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.
உரிமை மீறல்கள்
இந்தநிலையில், தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை (23-02-2026) மாலை 3 மணிக்கு ஒக்ஸ்போர்டு யூனியன் வளாகத்திற்கு வெளியே பெரிய அளவிலான போராட்டத்தைத் தமிழ் அமைப்புகள் முன்னெடுக்கவுள்ளன.

2009 போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளில் ராஜபக்ச குடும்பத்திற்கு உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு இத்தகைய கௌரவமான தளங்களை வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு எனக் குறிப்பிட்டு இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டு, நாமல் ராஜபக்சவின் தந்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்ற வந்தபோதும், தமிழர்களின் பிரம்மாண்ட போராட்டத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |