தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்...காவல்துறையினர் அராஜகம் : சாடும் முன்னாள் எம்.பி
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரின் அச்சுறுத்தல்களைப் பிரயோகித்து வருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (10) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை கட்டுமானத்தை அகற்றி மக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டு முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்.
இங்கே முன்னெடுக்கப்படும் இனரீதியான போராட்டத்தை நசுக்குவதற்கு சிறிலங்கா காவல்துறை முழு அளவிலே தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எங்கள் மீது தொடர்ச்சியாக காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
காணி உரிமையாளர்கள் எங்களோடு சேர்ந்து போராடக் கூடாது, போராட்டத்திற்கு வருகின்ற மக்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது.
இவ்வாறான நெருக்கடிகளை காவல்துறையினர் ஏற்படுத்தியிருக்கின்ற போது சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்குவிற்கும் இனவாதிகளுக்கும் துணைபோகின்ற செயற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவதற்கு அநுர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
